சரி, ரூபாய் நோட்டுகள் அரசாங்கத்திடம் இருந்து வெளிவந்தவுடன் அதன் இருப்பிடம் , போகும் வழிகள் கண்காணிக்கப்பட இயலாத ஒன்றாகிவிடுகிறது. நூறு ரூபாய் என கணக்கு காண்பித்து அறுபது ரூபாய் கொடுக்கும்போது 40 ரூபாய் கள்ளப்பணமாக மாறுகிறது. இதுபோலத்தான் கம்பெனிகளில் வேறு விதமாக கொள்ளை கொள்ளையாக கோடிக்கணக்கான ரூபாய்கள் கறுப்புப் பணமாக செல்வந்தர்களிடம் சேருகிறது. இதனை ஒழிக்க முடியாதா என இதுநாள்வரை கேள்வி கேட்காதவர் இல்லை.
இப்போதுள்ள நவீன யுகத்தில் இதனை முற்றிலுமாக தவிர்க்க இயலும், எப்படி ???
நாட்டில் உள்ள அனைவரது பணமும் அரசாங்கத்திடமே இருக்கும். நாம் ஒருவருக்கு அதனை கொடுத்து பொருள் வாங்கும்போது நம் கணக்கில் இருந்து பொருள் விற்பவர் கணக்கிற்கு பணம் மாற்றப்படும். இது அரசாங்கத்தின் கணிப்பொறியில் நடைபெறும். பொருள் பரிவர்த்தனை எப்போதும் போல இருவருக்குள் நடைபெறும்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கமே ஒரு தனித்துவமான எண்ணை அளிக்கும். அட , இதுதான் இப்போ வரப்போகுதே, ஆமாம் அதேதான். அத்துடன் வங்கிக்கணக்கு இல்லாத அனைவருக்கும் அரசு வங்கிகளில் ஒரு கணக்கு ஏற்படுத்தி கொடுக்கப்படும், ATM கார்டு கொடுக்கப்படும். செல்போன் கார்டு படிப்பான் வசதியுடன் உருவாக்கப்படும்.அல்லது செல்போன் மூலம் பணபரிமாற்றம் செய்யும்படி வசதி செய்யப்படும். ஐம்பது ரூபாய்க்கு மேல் உள்ள ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும், அவை பின்னர் தடை செய்யப்படும்.
நடைமுறை இவ்வளவுதான்,
சிறு பொருட்கள்( நூறு ரூபாய்க்கு கீழ் ) வாங்க மட்டும்தான் பணம். மற்றவைகளுக்கு கார்டு மூலம் பணம் செலுத்த வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பண பரிமாற்ற ஆணையம் மூலம் பதிவு செய்யப்படும். முதலில் சிறிது சிரமமாகத்தான் இருக்கும், ஆனால் இதன் பலன்கள் அளவிட முடியாதவை.
- வரி என்ற ஒன்று நாம் கட்ட வேண்டியதில்லை, அதனை கணக்கிட்டு அரசாங்கமே பிடித்துக்கொள்ளும்.
- வருமான வரி, விற்பனை வரி, மற்றும் உள்ள அனைத்து வரிகளும் ஒளிவு மறைவின்றி நேராக அரசிடம் செல்லும். அதே போல, அரசாங்கம் வேலை கொடுக்கும் ஒப்பந்ததாரர்களும் செலவை மறைக்க முடியாது. ரியல் எஸ்டேட் அதிபர்கள், வணிகர்கள், என எங்கும் இனி கறுப்புப் பணம் இருக்காது.
- கள்ள நோட்டுகள் காணமல் போகும். நாட்டின் பாதுகாப்பு பலப்படும்.
- அனைவரின் பணமும் அரசாங்கத்திடம் இருப்பதால், திருடு போகாது.
- விவசாயிகளுக்கு மானியம் நேரடியாக கிடைக்கும். அதுபோல வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசு உதவிகள் நேரடியாக கிடைக்கும்.
- நாட்டின் உண்மையான உற்பத்தி என்னவென எளிதில் கண்டு கொள்ளலாம்.